ஒரு ஊரில் ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவன் பொய் சொல்லும் பழக்கம் உள்ளவன். அந்த ஊரில் எல்லாவித கெட்ட பழக்கங்களையும் உடைய ஒருவன்தான் அவனுக்கு நண்பன். அந்த கெட்டவன் செய்யும் அநியாயங்களில் இருந்து அவனைக் காப்பாற்ற இந்த பொய்யன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லி அவனைக் காப்பாற்றுவான்.
உண்மைக்கு மாறாக பல முறை பொய்யன் மனமறிய பொய் சாட்சி சொல்லியுள்ளான்.
இப்படியாக அவன் பொய் சொல்லியதில் கணவன் மனைவி பிரிவு, பெற்றோர் மகன் பிரிவு, அநியாயமாக ஏழையின் நிலத்தைப் பிடுங்கி பணக்காரன் எடுத்துக் கொண்டது, நியாயமாக வியாபாரம் செய்த வியாபாரி நட்டப்பட்து என்பது போல பலர் அவனால் பாதிக்கபட்டு உள்ளார்கள்.
கிராமத்து பழக்கப்படி அவன் கோவிலில் கற்பூரம் அணைத்து பொய் சத்தியம் சொல்வான்; தன்னுடைய மேல் துண்டைப் போட்டு தாண்டுவான். இப்படி பொய் சத்தியம் செய்வதால் யார் பலன் அடைகிறார்களோ அவர்களிடம் பணம்,பொருள் முதலிய சன்மானம்
வாங்கிக் கொள்வான். அவனால் பாதிப்படைந்தவர்கள் அவனுக்கு நன்றாக சாபம் கொடுப்பார்கள். அந்த ஊர் மக்கள் எல்லாருமே அவனை வெறுத்து ஒதுக்கி வைத்தார்கள். அவனுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று முடிவு செய்து இருந்தார்கள். ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தவே மாட்டான்.”எந்த சாபமும் என்னை ஒன்றும் செய்துவிடாது; உங்கள் உதவி இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுவேன்”என்று எல்லோருக்கும் பதிலாகச் சொல்வான்.
திடீரென ஒருநாள் காலையில் அவனது ஒரு கையும் ஒரு காலும் செயலற்றுப் போய்விட்டது;அவன் வாய் கோணலாக இழுத்துக் கொண்டது ;அவனுக்கு சரியாகப் பேச்சு வரவில்லை. இதனால் அவனால் வீட்டை விட்டு எங்கும் வெளியில் போகமுடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. அவனது நிலையைக் கண்டு அவன் மேல் இரக்கம் காட்டுபவர் யாருமே இல்லை. அவனால் பலன் பெற்றவர்கள்கூட அவனைவிட்டு விலகிப் போனார்கள்.
வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமை வந்தது.அவன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு எடுபிடி வேலைக்குச் செல்லத் துவங்கினர். அவன் மனைவியும் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்யச் சென்றாள். அதன்மூலம் அவர்கள் அரைவயிறு சாப்பிடவும், பொய்யனுக்கு மருத்துவ செலவு செய்யவும் முடிந்தது. தன்னுடைய குடும்பம் தன்னால்தான் இந்த இழிவான நிலைமைக்கு வந்ததாக அவன் மனதுக்குள் வருந்தினான்.
இனி வருந்தி என்ன பயன்; நெஞ்சாரப் பொய் சொல்லி பலருடைய வாழ்வை அழித்ததற்கு அவனுக்கு தக்க தண்டனை கிடைத்துவிட்டது. அவனால் ஒரு பாவமும் அறியாத அவன் குடு்ம்பமே துன்பப்பட நேர்ந்தது.
எனவே, நாம் மனமறிந்து பொய் சொல்லாமல் நேர்மையாக வாழ்ந்து நன்மை பெறுவோம். எல்லாருக்கும் நல்லவர்களாக வாழ்வோம்.